நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட உள்ளதால் மதுரையில் இன்று மலர்களின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
திருவிழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக அதிகரிக்கும். நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாட உள்ளதால் மலர்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் செயல்பட்டு வரும் மலர் சந்தையில் இன்று பூக்களை வாங்குவதற்காக ஏராளமான பூ வியாபாரிகள் குவிந்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து விவசாயிகள் கொண்டு வந்த மலர்கள் விற்பனை செய்யப்பட்டது.
மல்லிகை பூ கிலோ ரூ. 1,200-க்கும், முல்லை பூ ரூ. 700-க்கும், சம்பங்கி பூ ரூ. 300-க்கும், செவ்வந்தி பூ ரூ. 200-க்கும், செண்டு பூ ரூ.300-க்கும், பட்டன் ரோஸ் ரூ. 150-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. பூக்களின் விலை உச்சத்தை தொட்ட போதிலும் நாளை பொதுமக்கள் அனைவரும் பூக்களை வாங்கி ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாடுவார்கள் என்பதால் விலை உயர்வை பற்றி கவலை இல்லாமல் வியாபாரிகள் வாங்கி சென்றனர். மொத்த வியாபார சந்தையில் மல்லிகை பூ, கிலோ 1200க்கு வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்ய உள்ளதால் சில்லறை கடைகளில் நாளை பூக்களின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.