Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல்: 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்த நீர்வரத்து…. கண்காணிக்கும் காவல்துறை….!!!!

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக கர்நாடகா மற்றும் கேரள மாநிலம் வயநாடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால் கர்நாடக மாநிலத்திலுள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி 2 அணைகளிலிருந்தும் வினாடிக்கு 23,471 கன அடி உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளான தேன்கனிக் கோட்டை, நாட்றாபாளையம், அஞ்செட்டி, ராசிமணல், பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 40ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. அந்த வகையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 50ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதன் காரணமாக மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்து அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. அத்துடன் மெயின் அருவிக்கு போகும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதற்கிடையில் இந்த நீர் வரத்தை காவிரி நுழைவிடமான தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மீண்டுமாக நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து நீடிக்கிறது. சேலம் மேட்டூர் அணை முழுகொள்ளளவை எட்டியதால் அதன் தாக்கம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்து அருவி வரை இருக்கிறது. இதனால் காவிரி கரையோரம் வசிக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு போகும்மாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

Categories

Tech |