மின்வேலியில் சிக்கி தந்தை, மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முகவூர் கிராமத்தில் அய்யனார்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஜித்(25), சுகந்திர பாண்டி(22) என்ற மகன்கள் இருந்துள்ளனர். இதில் அஜித் ராணுவத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். கடந்த 15 நாட்களுக்கு முன்பு அஜித்திற்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் அய்யனார் தனது மகன்களுடன் சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் மாரநாடு வயல் பகுதிக்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து காட்டு பன்றிகளிடம் இருந்து நெற்பயிர்களை பாதுகாப்பதற்காக வயல்களை சுற்றி அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதி பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.