ஆப்கானிஸ்தான் நாட்டில் சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். அவ்வாறு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதிலிருந்து பெண்களுக்கு பல கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். பெண்கள் மேல்நிலைக் கல்வி பயில தடை, பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கக்கூடாது, பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும்போது தங்களது முகத்தை மூடிக்கொள்ள வேண்டும் என அங்கு முன்பே பல கடுமையான உத்தரவுகளை தலீபான்கள் பிறப்பித்து உள்ளனர்.
இந்நிலையில் தலீபான்களின் மனித உரிமைகள் மீதான ஒடுக்குமுறையால் ஆப்கானிஸ்தானில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் வாழ்க்கை சீரழிந்து வருவதாக லண்டனை சேர்ந்த பன்னாட்டு மன்னிப்பு அவை உரிமைகள் குழு தங்களது ஆய்வு அறிக்கையில் தெரிவித்து இருக்கின்றனர்.
தலீபான்களின் கொடூரமான கொள்கைகளால் லட்சக்கணக்கான பெண்கள், சிறுமிகள் தங்களது பாதுகாப்பு மற்றும் நிறைவான வாழ்க்கையை நடத்துவதற்கான அவர்களின் உரிமையை இழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தலீபான்களின் இந்த கொள்கைகள் ஒடுக்குமுறை அமைப்பை உருவாக்குவதாக அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது. இதன் காரணமாக பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் பாகுபாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.