சென்னை மாநகருக்கு குடிநீர் தேவைக்காக ஆந்திர மாநில அரசுடன் தமிழக அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிருஷ்ணா நதி நீர்த்திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து ஆண்டுக்கு 2 தவணையாக நீர் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது ஏரிகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் போதிய அளவு நீர் இருப்பு போன்ற காரணங்கள் நீர் திறக்க வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதற்கு ஆந்திர மாநிலம் நீர் திறப்பு நிறுத்தி உள்ளது. தற்போது புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஓரளவு ஏரிகளுக்கு நீர் வருகிறது. அதன் படி நேற்றைய நிலவரப்படி 70 கன அடி நீர் ஏரிகளுக்கு வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து குடிநீர் வழங்கும் ஏரிகளில் 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 1,582 மில்லியன் கன அடியும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 129 மில்லியன் கன அடியும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 2 ஆயிரத்து 972 மில்லியன் கன அடியும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவையும் எட்டி நிரம்பி உள்ளது.
அதனைப்போல 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 3 ஆயிரத்து 149 மில்லியன் கன அடியும் நீர் இருப்பு உள்ளது. இதுதவிர 1,465 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் 838.45 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இதனை தொடர்ந்து பூண்டி ஏரியில் 48.96 சதவீதமும், சோழவரத்தில் 11.93 சதவீதமும், புழல் ஏரியில் 90.06 சதவீதமும், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும், செம்பரம்பாக்கம் ஏரியில் 86.39 சதவீதமும், வீராணம் ஏரியில் 57.23 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது. சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 69.36 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில். தற்போது 9 ஆயிரத்து 170 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.