கூலிப்படையை ஏவி வியாபாரியை காரில் கடத்திய போலீஸ் ஏட்டுவை பணி இடைநீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டத்திலுள்ள நரசிங்கபுரம் தில்லை நகர் பகுதியில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டைகோவில் பகுதியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏட்டாக பணிபுரியும் சின்னதிருப்பதி பகுதியில் வசிக்கும் ராம்மோகன் என்பவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பழ வியாபாரி அன்பரசன் போலீஸ் ஏட்டு ராம்மோகனுக்கு தரவேண்டிய பணத்தை தராமல் இருந்து வந்துள்ளது.
மேலும் அன்பரசன் ராம்மோகனிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீஸ் ஏட்டு ராம்மோகன் சேலத்தில் இருந்து 5 பேர் கொண்ட கூலிப்படையை ஏவி கடந்த 21-ந் தேதி பழ வியாபாரி அன்பரசனை காரில் கடத்தியுள்ளனர். இந்நிலையில் அந்த கும்பலிடம் இருந்து பணம் தயார் செய்து வருவதாக கூறிய அன்பரசன் அங்கிருந்து தப்பி ஆத்தூர் ரூரல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கூலிப்படையை சேர்ந்த சேலம் மல்லிகை நகர் பகுதியில் வசிக்கும் ஆனந்த், அயோத்தியாப்பட்டணம் தாதனூர் காலனியில் வசிக்கும் தீனதயாளன், பள்ளப்பட்டி பகுதியில் வசிக்கும் பன்னீர்செல்வம், பிரசாந்த், ஆனந்தராஜ் மற்றும் போலீஸ் ஏட்டு ராம்மோகன் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சேலம் காவல்துறையினர் போலீஸ் ஏட்டு ராம்மோகனை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.