மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சி எல்லைக்குட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறி லோடு ஏற்றி வந்த சரக்கு லாரி ஃபாஸ்டேக் ஸ்கேன் செய்வதற்காக கட்டணம் வசூல் செய்யும் இடத்திற்கு வந்தது. அப்போது அதற்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியுள்ளது. அதில் சுங்கச்சாவடியில் பணியில் இருந்த திருமங்கலம் சொக்கநாதப் பட்டியை சேர்ந்த தினேஷ் என்பவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அதன் பின் அவரை மீட்க சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற திருமங்கலம் காவல்நிலைய போலீசார் விபத்து பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு இடையே விபத்து நிகழ்ந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் பதை பதைக்க வைக்கும் இந்த காட்சியை பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றார்கள்.
மழைக்காலம் என்ற காரணத்தினால் சாலைகளில் நீர் தேங்கி இருக்கின்றது. இதனால் வேகமாக செல்லும்போது வாகனங்களில் பிரேக் போடும்போது சில நேரங்களில் பிரேக் பிடிக்காத சூழல் ஏற்படலாம். அவ்வாறான விபத்துக்களை தடுப்பதற்கு வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.