பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில் கரையாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மற்றும் பழங்குடி இன மக்கள் வசித்து வரும் அகஸ்தியர் காணி குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்நிலையில் பாபநாசம் வன சோதனை சாவடியில் இருந்து கரையாறு அணை வரை 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை சேதமடைந்துள்ளதால் கடந்த 12ஆம் தேதி முதல் சாலை புதுப்பிப்பு பணிகள் தொடங்கின.
அதனால் இந்த சாலை பணிகள் 20ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சாலை பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையாமல் இருப்பதால் இந்த தடை உத்தரவு வருகின்ற 24-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும் அதுவரை அகஸ்தியர் அருவி மற்றும் சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.