சாலையோரம் இருந்த பேக்கரி கடைக்குள் கார் புகுந்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அருகே உள்ள அடுக்கு மலை என்னும் கிராமத்தை சேர்ந்த மணி மகன் மணிபாரதி என்பவர் வசித்து வருகிறார். இவர் திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கல் கிராமம் விழுப்புரம் திருவண்ணாமலை சாலை கூட்டு ரோட்டில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் பேக்கரியில் மணிபாரதி அவரது மனைவி பூமல்லி போன்றோர் இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 16 வயதுடைய இரண்டு சிறுவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக கிருஷ்ணகிரி மாவட்டம் மோரன் அல்லி கிராமத்தை சேர்ந்த சுசீந்திரன் மகன் சுதர்சன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் மணிபாரதியின் பேக்கரி கடைக்குள் புகுந்து நின்றது.
இதில் கடைக்குள் இருந்த மணிபாரதி, பூமல்லி மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு சிறுவர்கள் போன்றோர் காயம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து 4 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது பற்றி கண்டாச்சிபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.