பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமரின் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரிப் பாகிஸ்தானின் பிரத புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் அரசு தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
இதற்கிடையே அந்த நாட்டில் பஞ்சாப் மாகாணத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றுள்ளது. 20 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ-இன்சப் கட்சிகள் அதிக இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. இம்ரான் கான் கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் நவாஸ் ஷெரிப் தலைமையிலான ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி நான்கு இடங்களையும் சுயேட்சை ஒரு இடத்தையும் கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் பஞ்சாப் தேர்தல் வெற்றியை தொடர்ந்து நாட்டில் உடனடியாக பொது தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருக்கின்றார். இது தொடர்பாக அவர் பேசும்போது நாட்டின் தற்போதைய அரசியல் தன்மையில் இருந்து விடுபடுவதற்கு நியாயமான பொது தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும்.
என்னை ஆட்சியில் இருந்து நீக்கிய போது பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என நான் அறிவித்தேன். ஆனால் என் முடிவை கோர்ட் நிராகரித்தது. ஆனால் என் முடிவு சரியானது தான் என நான் இன்னும் நம்புகின்றேன் என தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் 2023 ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாகவே பொது தேர்தல் நடத்த வேண்டும் என இம்ரான்கான் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.