கல்கியின் புகழ்பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாக வைத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் பொன்னியின் செல்வன் ஆகும். 2 பாகங்களாக உருவாக உள்ள இந்த படத்தின் முதல்பாகம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியது. முன்னணி திரைப்பிரபலங்கள் பல பேர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன்னதாக பொன்னியின் செல்வன் படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டு இருப்பதாக கூறி படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பி இருக்கும் இந்த நோட்டீசில், “சோழர்களின் வம்சத்தில் நாமம்இடும் பழக்கம் இல்லாத சூழ்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது. அத்துடன் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்து இருப்பதாகவும்” அதில் கூறப்பட்டிருந்தது.
அதுமட்டுமின்றி இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டு உள்ளது என்பது படம் பார்த்தால் தான் தெரிந்துகொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்டவேண்டும்” என வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம் என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சோழர்களின் ஆட்சி தொடர்பாக கூறும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த வீடியோவானது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.