தளவாடியை அடுத்துள்ள தமிழக கர்நாடகா எல்லையில் காரப்பள்ளத்தில் இருந்து புளிஞ்சூர் செல்லும் சாலையில் 35 வயது வாலிபர் ஒருவர் கையில் குச்சியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் குட்டியுடன் யானை ஒன்று உலா வந்தது. ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த அந்த வாலிபரை கண்டது யானை திடீரென ஆவேசம் அடைந்து அவரை நோக்கி ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.
அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த யானை தனது குட்டியுடன் வனப்பகுதிகள் சென்றுவிட்டது. இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டி தன்னுடைய செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளார். இதற்கிடையில் குட்டியுடன் வந்த காட்டு யானை அந்த வழியாக வந்த கரும்பு லாரியை வழிமறித்தது. அதில் இருந்த கரும்பை துதிக்கையால் இழுத்து தின்றதுடன் தனது குட்டிக்கும் போட்டது. இந்த சம்பவத்தால் அந்த ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.