பொள்ளாச்சி அருகில் கோட்டூர் கடை வீதியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 9 ஆம் தேதி சாக்கடை, கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த கோட்டூர் நகர பா.ஜனதா தலைவர் ரமேஷ் மற்றும் ரவிக்குமார் தூய்மை பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து கோட்டூர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தூய்மை பணியாளர்களை திட்டியவர்களை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கூட்டு பேரூராட்சி அலுவலக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதனைதொடர்ந்து பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் 75 பேர் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வீடுகளுக்கு சென்று குப்பைகளை சேகரித்தல, சாக்கடை, கால்வாய் சுத்தப்படுத்தல் போன்ற சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் ஆனந்த், தலைவர் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் தரப்பில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் இந்த போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.