பிருதிவி ராஜ், சம்யுக்தா மேனன் போன்றோர் நடித்துள்ள கடுவா மலையாள திரைப்படம் திரைக்கு வந்திருக்கிறது. இப்படத்தை தமிழில் வாஞ்சிநாதன், ஜனா, எல்லாம் அவன் செயல் ஆகிய படங்களை இயக்கி பிரபலமான ஷாஜிகைலாஸ் இயக்கி இருக்கிறார். இந்த படம் கேரளாவில் உயர் அதிகாரிக்கு எதிராக போராடிய கடுவாகுன்னல் குருவச்சன் என்பவரது வாழ்க்கை உண்மை கதையை அம்சமாக வைத்து தயாராகி இருக்கிறது.
இந்நிலையில் கடுவா திரைப்படத்தில் “மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம் தான் காரணம்” எனும் வசனம் இடம் பெற்றுள்ளது. இந்த வசனங்களுக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. இதையடுத்து கேரள மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையம் இயக்குனர் ஷாஜி கைலாஸ் உள்ளிட்ட படக் குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இது தொடர்பாக ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் இருப்பதாவது “நான் இயக்கிய கடுவா திரைப்படத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் அடிப்படையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். திரைக் கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானோ அதன் மற்றொரு பக்கம் குறித்து யோசிக்காமல் செய்து விட்டோம் என்பதுதான் உண்மை” என்று பதிவிட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார். இப்பதிவை பகிர்ந்து பிரித்விராஜும் மன்னிப்பு கேட்டுள்ளார். அதாவது, மன்னிக்கவும், தவறு நடந்துவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.