ரூ.10 லட்சம் மோசடி செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள பாண்டியூர் பகுதியில் செல்லப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை நாகனாகுளம் பகுதியில் வசிக்கும் சதீஷ் என்பவரிடம் கார் வாங்கித் தருமாறு ரூ.5 லட்சத்து 36 ஆயிரத்தை கொடுத்துள்ளார். ஆனாலும் இவர் இன்னும் கார் வாங்கி தரவில்லை. இதனால் சதீஷிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டபோது ரூ.3 லட்சத்தை கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து செல்லப்பாண்டி தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
இதேபோன்று காரைக்குடி பகுதியில் வசிக்கும் சண்முகம் என்பவர் சதீஷ் மற்றும் சேகர் ஆகியோரிடம் லாரியை ரூ.7 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சண்முகம் தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தல்லாகுளம் காவல்துறையினர் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சேகரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.