தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய குரூப் 4 தேர்வு முறைகேட்டில் சிபிசிஐடி போலீசார் இதுவரை 16 பேரை கைது செய்துள்ளனர். அதேபோல குரூப் 2 ஏ தேர்விலும் முறைகேடு நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது. இது தொடர்பாக 42 பேர் மீது வழக்கு செய்யப்பட்டு, இதுவரை 8 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளியான ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஆயுதப்படை காவலர் சித்தாண்டியை சிவகங்கை – ராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள தனது தோட்டத்தில் பதுங்கியிருந்தபோது சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை சிபிசிஐடி போலீசார் சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் முக்கிய குற்றவாளியாக , தலைமறைவாவாக இருக்கும் ஜெயக்குமாரை தேடி தனி படை போலீசார் கேரளா , கர்நாடகா , ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.