கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கருங்கல், குளச்சல் சுற்று வட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதற்காக, பெண் வீட்டார் விசாரிக்க வரும்போது சில பேர் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர்கதையாகி வருகிறது. இதன் காரணமாக இளைஞர்கள் தங்களது மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் வகையில், “வரன்களை தடுக்கும் நல்உள்ளங்களுக்கு நன்றி. இப்படிக்கு திருமணமாகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக” இருந்து வந்தனர். சென்ற 2021 ஆம் வருடம் கருங்கல் ஆயினிவிளை பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்கள் அப்பகுதியில் பல சரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் தற்போது கருங்கல் அடுத்த பாலவிளை பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் வீட்டிலுள்ள பெண்களையே வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்கமாக போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்கு தெரு ஒட்டியுள்ளனர். அவற்றில், திருமண வரன்களை தடைசெய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டும் தடை செய்யட்டும்.
எங்களுக்கு சில நபர்களை அடையாளம் தெரியும். ஆகவே அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் இடம்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இப்போது இந்த வில்லங்க போஸ்டர் குறித்து பரபரப்பாக பேசப்படும் நிலையில், கருங்கல் காவல்துறையினர் இந்த விவகாரம் தொடர்பாக ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி போஸ்டர் அடித்த இளைஞர்களும் புறம் பேசி வரன்களை கெடுக்கும் ஆசாமிகளும் விசாரணை வளையத்திற்குள் சிக்கி விடுவோமோ என அச்சம் அடைந்துள்ளனர்.