திருமணம் செய்து கொள்வதாக நடிகையை ஏமாற்றிய புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டது. மணிகண்டன் மீதான புகாரை திரும்பப் பெறுவதாக நடிகை சாந்தினி கூறயதையடுத்து வழக்கு ரத்து செய்யப்பட்டது. நடிகை சாந்தினி, சசிகுமார் நடித்த நாடோடிகள் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன்.
இவருக்கு எதிராக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை சாந்தினி, புகார் ஒன்றை கொடுத்தார். அதில், அமைச்சர் மணிகண்டனும் தானும் கடந்த 5 ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்ததாகவும், இதனால் கருவுற்ற தன்னை மிரட்டி கருவைக் கலைக்க செய்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தார். தற்போது தன்னை திருமணம் செய்ய மறுப்பதோடு, தன்னை ஆபாசமாக பிடித்த படங்களை இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டுகிறார் என புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று இந்த மனு நீதிபதி சதீஸ்குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, நடிகை சாந்தினி தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாக வழக்கு தொடர்ந்திருந்தால் என்னவாகும்? என்று நடிகை தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.