பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகயிருப்பது குடிநீர் ஆகும். மனிதர்கள், விலங்கினங்கள் உட்பட பல உயிரினங்களுக்கும் குடிநீர் தேவையான ஒன்றாக இருக்கிறது. இதில் தூய்மையான, சுகாதாரம் நிறைந்த குடிநீரே ஆரோக்கிய சமூகம் ஏற்பட வழிவகுக்கும். இந்த நிலையில் நாடு முழுதும் நாம் பயன்படுத்தகூடிய குடிநீரில் நானில்பினால் என்ற நச்சுத்தன்மை கொண்ட ரசாயனம் அதிகளவில் கலந்துள்ளது என ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி அனுமதிக்கப்பட்ட அளவைவிட இந்த ரசாயனபொருள், குடிநீரில் 29 -81 மடங்கு அதிகம் காணப்படுகிறது. இந்த ரசாயனம் நானில்பினால் ஈதாக்சிலேட் (என்.பி.இ.) எனும் ரசாயன சேர்மம் உற்பத்திக்கு பயன்படுகிறது. இந்த என்.பி.இ. பொருட்களானது துணிதுவைக்க பயன்படுத்தும் டிடர்ஜென்டுகள் உள்ளிட்ட அன்றாட பயன்படும் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.
இவற்றில் என்.பி.இ. எனப்படும் ரசாயன சேர்மம் நேரடி சுற்றுச்சூழலில் கலந்து நானில்பினால்களாக உடைகிறது. இதையடுத்து அவை நீர் மற்றும் மண் போன்றவற்றில் எளிதில் கலக்கிறது. இவ்வகை ரசாயனம் தொழிற்சாலையில் தூய்மைப்படுத்தும் முறையின் போது வெளியிடப்படுகிறது. அத்துடன் என்.பி.இ. உற்பத்தியின் போது கழிவு நீரிலும் வெளியிடப்படுகிறது. இந்திய சந்தைகளில் விற்கப்பட்ட டிடர்ஜென்டுகளில் 11.92 சதவீத அளவைவிட அதிக அளவில் இந்த நானில்பினால்கள் இருந்துள்ளது என்று கடந்த 2019-ம் வருடம் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதை தவிரத்து அந்த ஆய்விலிருந்து அனைத்து ஆறு மற்றும் ஏரிகளிலும் அதிகளவில் இந்த ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது என்று டாக்சிக் லிங்க் எனப்படும் ஆய்வின் இணை இயக்குனர் சதீஷ் சின்ஹா தெரிவித்துள்ளார். இதனிடையில் இந்திய தரநிர்ணய வாரியம், குடிநீரில் பினால் ரசாயன சேர்மங்களின் அளவு குறித்து தர நிர்ணயம் செய்துள்ளது.
இருப்பினும் இந்தியாவில் குடிநீர் மற்றும் மேற்பரப்பு நீரில் நானில் பினால்கள் ரசாயனங்களுக்கான அளவு தொடர்பாக குறிப்பிட்ட எவ்வித நிர்ணயமும் இதுவரையிலும் இல்லை. நீர் நிலைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழலில் இந்த ரசாயனம் கலக்காமல் தடைசெய்யும் அடிப்படையில் டிடர்ஜெண்டுகள் உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களில் என்.பி.இ.க்களின் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கவோ (அல்லது) அதை முற்றிலும் நீக்கவோ நாட்டில் எவ்வித ஒழுங்குமுறை விதிகளும் இல்லை என்பது வருத்தத்திற்குரியது. இருந்தாலும் சர்வதேச அளவில் கவனத்தில்கொள்ளப்பட வேண்டிய ரசாயனம் என நானில்பினாலை ஐ.நா.வின் சுற்றுச்சூழல் திட்டமும் வரையறுத்து இருக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளும் முன்பே இந்த ரசாயனம் குறித்த ஆபத்துகளை ஒப்புகொண்டுள்ளது.
டிடர்ஜெண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் இந்த ரசாயன பொருட்களை நீக்குவதற்கான விதிமுறைகளையும் அவை நடைமுறைப்படுத்த தொடங்கிவிட்டது. இந்தியாவில் மிகஅதிக அளவாக பதிண்டாவில் ஆழ்துளை கிணற்றிலிருந்து எடுக்கப்பட்ட குழாய்நீரில் (80.5 பி.பி.பி. அளவு) இருக்கிறது. மிககுறைந்த அளவாக புது டெல்லியில் இந்திரபிரஸ்தா நகரில் அரசு வழங்கும் குடிநீரில் (29.1 பி.பி.பி. அளவு) இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. குடிநீரில் காணப்படகூடிய இந்த நானில்பினால் ரசாயன கலவையால் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு தீவிரபாதிப்பு ஏற்படும். இது தொடர்பாக முழு அளவில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான தர நிர்ணயம் உருவாக்கப்பட வேண்டும். இதற்குரிய நீண்டகால செயல்பாட்டு முறையால் நாட்டு மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கசெய்வதுடன், தரமுள்ள குடிநீர் கிடைப்பதும் உறுதிசெய்யப்படும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதுவரை நாட்டில் சுகாதாரம், பாதுகாப்பு நிறைந்த மற்றும் தரம் உள்ள குடிநீர் என்பது கேள்வி குறியாகவே காணப்படகூடும்.