Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“சேதமடைந்த தொகுப்பு வீடுகள்” இடிந்து விழும் அபாயத்தால் பொதுமக்கள் பீதி…. அதிகாரிகளுக்கு கோரிக்கை….!!!

வீடுகளை சீரமைத்து தருமாறு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் ஏ. நாகூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்த கிராமத்தில் ஏராளமானோர்  குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. அதுமட்டுமின்றி வீட்டின் மேற்கூறையில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால் மக்கள் வீட்டிற்குள் தங்குவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் யாரும் வீட்டிற்குள் தங்குவதில்லை.

இந்நிலையில் தற்போது மழை பெய்து வருவதோடு, பலத்த காற்றும் வீசுவதால் வீடுகள் அனைத்தும் இடிந்து விழும் அபாயத்தில் இருக்கிறது. மேலும் கூலி வேலை செய்து வரும் மக்களால் வீடுகளை சீரமைக்க முடியாததால், அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறுவதற்கு முன்பாக வீடுகளை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம் ஒரு மூதாட்டி வசித்து வந்த வீடு பலத்த மழையின் போது திடீரென இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |