கும்பகோணம், மலையப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஜி இளங்கோவன். இவர் நெல் ஜெயராமன் மீது கொண்ட ஈடுபாட்டால் 10 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இயற்கை விவசாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனது வேளாண் சாகுபடி நிலத்தில் திருவள்ளுவர் திருவுருவப்படம் தெரியும் வகையில் பாரம்பரிய நெல் ரகமான கருப்பு நிறம் கொண்ட நேபாள நாட்டு சின்னார் ரகமும், மைசூர் மல்லிகை ரகத்தையும் இணைத்து குறுவை சாகுபடியில் நடவு செய்துள்ளார்.
தற்போது 60 நாட்களை கடந்துள்ள இப்பயிர்கள் கதிர் வரத்தொடங்கியுள்ளது. இன்னும் 50 நாட்களில் பயிர்கள் அறுவடைக்கு வந்துவிடும் என்று அவர் தெரிவித்தார். இந்த புகைப்படம் பார்ப்பதற்கு மிகவும் தத்ரூபமாக இருப்பதால், விவசாயி இளங்கோவனை பலரும் வாழ்த்தி வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.