கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5000க்கும் மேல் வசூலிக்கப்படும் ஐசியூ அல்லாத படுக்கைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வு காரணமாக இனி மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ மருத்துவம் பார்ப்பதற்கு இனி தனியார் மருத்துவமனைக்கு சென்று அனுமதிக்கப்பட்டால் அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும் என்ற சூழ்நிலை உருவாகியுள்ளதால், மக்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். தற்போது தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் நடத்திய தரவுப்படி 62% மக்கள் தனியார் மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். அப்படி இருக்கும்போது படுக்கைகளுக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிப்பது பாமர மக்களை மேலும் கஷ்டப்படுத்தும் என்று கூறப்படுகின்றது.