ஐடி ஊழியரை மூணாவதாக திருமணம் செய்து மோசடி செய்த ஆந்திரா பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆவடி அடுத்த முத்தா புதுப்பேட்டை குமார நகர் தெருவை சேர்ந்த இந்திராணி என்பவரின் மகன் ஹரி. எம்சிஏ பட்டதாரியான இவர் தரமணியில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 2014 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார்.
இதை எடுத்து ஹரி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதற்கு வரன் தேடி வந்தார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு தோட்ட வேலை செய்ய வரக்கூடிய நபர் மூலமாக ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த சரண்யா என்ற பெண்ணை பார்த்துள்ளனர். அவர் தனக்கு 35 வயது என்று கூறியதோடு தனக்கு உறவினர்கள் யாரும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். அதன் பிறகு சரண்யாவுக்கும் ஹரிக்கும் உறவினர்கள் முன்னிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது.
இந்நிலையில் திருமணத்திற்கு பின்னர் இருவரும் இல்லற வாழ்க்கையை தொடங்கிய நிலையில் ஹரியின் சொத்து விவரங்களை கேட்டு சரண்யா தொல்லை கொடுத்துள்ளார். மேலும் ஹரியையும் அவரது தாயாரையும் மிரட்டி சொத்துக்களை தனது பெயரில் எழுதி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு அவர்கள் உடன்படாத காரணத்தினால் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறி திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து ஹரியின் தாயார் இந்திராணி ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பெயரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சரண்யாவை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரணை செய்தனர்.
அப்போது பல உண்மை தகவல் வெளியானது. அவரது பெயர் சுகுணா என்றும் போலியாக சரண்யா என கூறி இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் 50 வயதான சுகுணாவுக்கு ஏற்கனவே திருப்பதியை சேர்ந்த ரவி என்பவருடன் 2-வது திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் இருப்பதும், பணத்திற்காக ஹரியை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.