இலங்கை நாட்டில் உச்சத்தை எட்டியுள்ள பொருளாதார நெருக்கடியால் எரிப்பொருள் தட்டுப்பாடு நீடித்து வருகிறது. இதனிடையில் தேவையான எரிப்பொருள் கிடைக்காததால் வாகனங்களின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் முக்கியமாக நாடு முழுதும் உணவு தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. இதையடுத்து வாகன இயக்கம் இல்லாததால் கடைகள் மற்றும் சந்தைகளுக்கு பொருட்கள் வரத்து குறைந்துவிட்டது.
ஒருவார காலமாக இந்நிலை நீடிப்பதால் சிறிய கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை அனைத்து வர்த்தக நிறுவனங்களிலும் உணவுபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு கரைந்து வருகிறது. இதன் காரணமாக கடைகளானது அடுத்தடுத்து மூடப்படுகிறது. தலைநகர் கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் போதிய இருப்பு வந்து சேராமல் கடை உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர். இதனால் இலங்கை மக்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.