போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தேன் விற்பனை களை கட்டியது.
கோயம்புத்தூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 5 தளங்களுடன் கட்டிடம் அமைந்துள்ளது. அந்தக் கட்டிடத்தில் மலைத் தேனீக்கள் 10 இடங்களில் கூடு கட்டி இருந்தது. இந்நிலையில் வடமாநில வாலிபர்கள் அங்கிருந்த 4 தேன் கூடுகளை எடுத்து அதில் இருந்த 40 கிலோ தேனை விற்பனை செய்தனர். அந்த விற்பனை கமிஷனர் அலுவலகத்தில் விறுவிறுப்பாக நடந்தது.
இந்நிலையில் கலப்படமற்ற தேன் என்பதால் பொதுமக்கள் பலரும் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து ஆர்வமுடன் போட்டி போட்டு வாங்கி சென்றனர். மேலும் ஒரு கிலோ தேன் ரூ.650-க்கு விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் தேன் ரூ.20 ஆயிரத்திற்கு விற்பனை ஆனது. அந்த தேன் விற்பனை செய்த பணத்தை வட மாநில வாலிபர்களுக்கு காவல்துறையினர் வழங்கினர். மேலும் இன்னும் சில நாட்களில் மீதமுள்ள தேன் கூடுகளிலிருந்து எடுக்கப்படும் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.