ஒற்றை கையுடன் சைக்கிள் ஒட்டி வீடு வீடாக தபால் விநியோகம் செய்யும் நபரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சடையம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1971-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை கிராமப்புற தபால் நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் ஸ்ரீராமனுக்கு கடந்த 1968-ஆம் ஆண்டு பசு மாடு முட்டியதில் வலது கை துண்டிக்கப்பட்டது. இதனால் நம்பிக்கையை கைவிடாமல் அவர் ஒற்றை கையுடன் சைக்கிள் ஓட்ட தொடங்கியுள்ளார். தற்போது ஸ்ரீராம் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள டி.வி.எஸ். நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் ஸ்ரீ ராம் தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ஒற்றை கையால் பல கிலோ மீட்டர் வரை சைக்கிள் ஒட்டி சென்று வீடு வீடாக தபால் விநியோகம் செய்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது. மனதில் தைரியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். எனது மனைவியின் மருத்துவ செலவிற்கு மட்டும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் ஆகிறது. இதனால் நான் தினமும் ஒற்றை கையுடன் 20 முதல் 30 கிலோமீட்டர் வரை சைக்கிள் ஓட்டி சென்று வேலை செய்து பார்த்து வருகிறேன் என அவர் கூறியுள்ளார். இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.