தஞ்சாவூர் மரக்கோட்டை பகுதியில் சுந்தரேசன் (28) என்பவர் வசித்து வருகிறார். பாபநாதசம் சேத்துப்பட்டு பகுதியில் வசித்து வருபவர் மகேஸ்வரன்(33). இவர்கள் இருவரும் கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில் இருப்பதாவது, கோவை பாப்பாநாயக்கன் பாளையம் பகுதியில் ஸ்ரீ விநாயகா சொல்யூசன் எனும் பெயரில் சுபாஷினி(28) என்பவரும், அசோக்குமார் என்பவரும் ஒரு நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்கள் டெல்லியிலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியதன் படி, ரூபாய் 12 ½ லட்சத்தை ஆன்லைன் வாயிலாக சுபாசினியின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தோம். இதையடுத்து வேலைக்கான ஆணையையும் வழங்கினார்கள்.
ஆனால் அது போலியானது என தெரியவந்தது. ஆகவே எங்களை மோசடி செய்த 2 பேர் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா விசாரணை மேற்கொண்டு நேற்றிரவு சுபாசினியை கைது செய்தார். அதன்பின் இடிகரை பாரதி நகரை சேர்ந்த சுபாசினியிடம் இந்த மோசடி பற்றி தீவிர விசாரணை நடந்தது. இவர் பலரிடம் இது போன்று மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கைதானவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அத்துடன் அசோக்குமார் என்ற மற்றொருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.