சாலையில் கவிழ்ந்த கார் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 7 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழாயிரம்பண்ணை பகுதியில் பரமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் மதுரையில் இருக்கும் குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றுள்ளார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு மீண்டும் சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள வெள்ளாகுளம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துவிட்டது.
அப்போது மதுரையிலிருந்து சிவகாசி நோக்கி பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 2 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த 7 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.