பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கின்றது. அதன்படி அந்த நாட்டிற்கு அதிக வருவாய் வழங்கும் சுற்றுலா துறைக்கு புத்துயிர் ஊட்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதியே யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தில் இருந்து இந்தியாவிற்கு விமானங்கள் இயக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
அங்கிருந்து அடுத்த மாதம் முதல் விமானங்கள் இயக்கப்படும் என விமான போக்குவரத்து துறை மந்திரி நிமல் சிறிபால டிசில்வா நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார். பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்ட பின் அவர் இதனை கூறியுள்ளார். இந்த நிலையில் இந்த விமான நிலையத்தின் ஓடுபாதை நீளம் குறைவானது என்ற காரணத்தினால் தற்போது இங்கிருந்து சிறிய ரக விமானங்களை இயக்க முடியும். அதனால் ஓடுபாதையை விரிவுபடுத்த இந்தியா உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஏற்கனவே இந்த விமான நிலையத்தை மேம்படுத்த இலங்கை அரசுடன் இந்தியாவும் உதவி செய்திருக்கிறது.
கடந்த 2009ஆம் வருடம் அக்டோபரில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் என பெயர் சூட்டப்பட்ட இந்த விமான நிலையத்திற்கு சென்னையிலிருந்து முதல் சர்வதேச விமானம் வந்தது. மேலும் சென்னை பலாலி இடையே வாரம் மூன்று விமானங்கள் இயக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2019 நவம்பரில் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.