செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மாமல்லபுரத்தில் வரும் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ம் தேதி வரை சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் உலகம் முழுவதும் இருந்து 186 நாடுகளை சேர்ந்த 2,500 செஸ் விளையாட்டு வீரர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்த போட்டியையொட்டி பல அடிப்படை வசதிகள் செய்ய தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ள ரூபாய் 8 கோடி மதிப்பீட்டில் மாமல்லபுரத்தில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் செய்யப்படவுள்ளது.
இந்த நிதியில் புதியதாக மின்விளக்குகள் பொருத்துதல், நவீன கழிப்பறைகள் மற்றும் குடிநீர் தொட்டியுடன்கூடிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், சோழி பொய்கை குளத்தை தூர்வாரி சீரமைத்தல், கோவளம் சாலையில் நடைபாதை அமைத்தல் ஆகிய அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வரக்கூடிய வெளிநாட்டு வீரர்கள், ரசிகர்கள் இந்நகரை பார்த்து ரசிக்கும் விதமாக மாமல்லபுரத்தை அழகுபடுத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இப்பணிகளை செய்ய பேரூராட்சி சார்பாக சென்ற 15ஆம் தேதி டெண்டர் விடப்பட்டது.
இவற்றில் ரூபாய் 5 கோடியே 25 லட்சத்துக்கு மட்டும் பணிகள் டெண்டர் எடுக்கப்பட்டது. மீதம் உள்ள ரூபாய் 2.75 கோடி பணிகளுக்கான டெண்டர் எடுக்க யாரும் முன்வரவில்லை. அதன்பின் டெண்டர் கோராத ரூபாய் 2.75 கோடி தொகைக்கு பேரூராட்சி நிர்வாகமே பணிகள் மேற்கொள்வது பற்றி ஆலோசிப்பதற்காக மாமல்லபுரம் பேரூராட்சி மன்ற அவரச கூட்டம் தலைவர் வளர்மதி எஸ்வந்தராவ் தலைமையில் நடைபெற்றது. அதற்கு செயல் அலுவலரான கணேஷ் முன்னிலை வகித்தார். மேலும் கூட்டத்தில் தலைவர் உள்ளிட்ட அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், திமுக கவுன்சிலர்கள் 5 பேர், மதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் என மொத்தம் 11 பேர் கலந்துகொண்டனர்.
இதனிடையில் இதில் மாமல்லபுரம் பேரூராட்சி துணைத் தலைவர் ஜி.ராகவன் உள்ளிட்ட அதிமுக கவுன்சிலர்கள் 4 பேர் கலந்துகொள்ளவில்லை. 14வது வார்டு மதிமுக பெண் கவுன்சிலர் எதற்காக கூட்டம் நடைபெறுகிறது என்று தெரிவிக்காமல், 1 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு 12 மணிக்கு குறுகிய நேரத்தில் தகவல் தெரிவிக்கிறீர்கள் என்றுகூறி இதனை கண்டித்து கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். அதனை தொடர்ந்து கூட்டத்தின் முடிவில் பேரூராட்சி நிர்வாகமே டெண்டர் கோரப்படாத தொகைக்கான அனைத்து பணிகளையும் மேற்கொள்வதற்கு ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செயல் அலுவலர் கணேஷ் கூறினார்.