திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் மேலாண்மை பணிகள், தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டை தூர்வாருதல், வரவு கால்வாய் மற்றும் புறம்போக்கு நிலங்களில் நீர் உறிஞ்சி கழிவுகள் வெட்டுதல், மரக்கன்று நடுதல், அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் மேலாண்மை பணிகள் செயல்பட்டு வருகிறது.
மேலும் மாவட்ட நிர்வாகம் ஊர்கூடி ஊரணி காப்போம் என்னும் இயக்கத்தின் மூலமாக இந்த பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக 2022 – 23 வருடத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊரகப் பகுதிகளில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் தூர்வாருதல் பராமரித்தல் புதிய நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளுதல் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சியில் ஊராட்சி அளவில் ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றது.
இதில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவருக்கு மழைநீர் காவலர் என விருதை வட்டார அளவில் மூன்று விருதுகள் மாவட்ட அளவில் மூன்று விருதுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் ஊராட்சிகளில் நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்ட தரமதிப்பீடு குழுவால் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். பயன்பாடு, புது முயற்சிகள், சுற்றுச்சூழல் மேம்பாடு, மரம் வளர்த்தல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல் போன்ற பணிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்றத் தலைவர்களும் ஊர் கூடி ஊரணி காப்போம் என்னும் இயக்கத்தில் பங்கேற்று தங்கள் ஊராட்சிகளில் உள்ள நீர்நிலைகள் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு விருதுகளை பெற்றுக் கொள்ளலாம் என அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.