இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்துக் கொண்டிருப்பதால் 80% மக்கள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, உணவு பற்றாக்குறை போன்றவற்றால் மக்கள் பசியில் வாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஐநா, இலங்கை மக்களின் வாழ்க்கை முறை மற்றும் சூழ்நிலை எந்த அளவிற்கு பாதிப்படைந்திருக்கிறது என்பது குறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டுள்ளது.
அதன்படி, அந்நாட்டில் விலையேற்றம் மற்றும் மக்கள் வாங்கக்கூடிய திறன் குறைந்த காரணத்தால் 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் விலை மலிவான மற்றும் விரும்பத்தகாத உணவு பொருட்களை உண்ண தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சத்து நிறைந்த உணவை எடுத்துக்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது.
எனவே, ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் உண்டாகியிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விளைச்சல் கடந்த இரண்டு பருவங்களில் குறைவாக இருந்துள்ளது. இதனால் தான் விலை ஏற்றம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கான விலையும் 20% உயர்ந்திருக்கிறது என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டிருக்கிறது