பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்படும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நிலையில், அந்த பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் உயிரி தொழில்நுட்பவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதில் மாணவர் சேர்க்கையில் மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்படி 10 சதவீத இடங்கள் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் ஓசி என்ற பொதுப்பிரிவினருக்கு 31 சதவீத இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 30 சதவீத இட ஒதுக்கீடு, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், எஸ்சி பிரிவினருக்கு 18 சதவீதம், எஸ்டி பிரிவினருக்கு 1 சதவீதம் என்று 69 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.