கோவில் நிர்வாகத்திற்கு மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை ஆசிர்வாதம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து திருமணம் முடிந்த மறுநாள் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் கோவில் வளாகத்தில் காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது பிரச்சனையானது. இதனால் கோயில் நிர்வாகம் நயன்தாராவிற்கு நோட்டிஸ் வழங்க முடிவு செய்தது.
இந்நிலையில், கோவில் நிர்வாகத்திற்கு மன்னிப்பு கோரி விக்னேஷ் சிவன் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், திருமணம் முடிந்ததும் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதிக்கு வந்தோம். பின்னர் கோயிலுக்கு வெளியே வந்தபோது மக்கள் எங்களை சூழ்ந்து கொண்டனர். மேலும், சீக்கிரமே ஃபோட்டோஷூட்டை முடித்துவிட்டு கிளம்ப முடிவு செய்தோம். இல்லையென்றால் ரசிகைகள் மீண்டும் வந்து சூழ்ந்து கொள்வார்கள். அந்த அவசரத்தில் இருந்ததால் நாங்கள் காலணிகளுடன் கோயிலில் நடந்ததை கவனிக்க தவறி விட்டோம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார்.