கர்நாடகத்தில் இம்மாத துவக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது. அந்த பருவமழை தொடங்கியும் மாநிலத்தில் எதிர்பார்த்த மழை பெய்யவில்லை. ஒருசில பகுதிகளில் பரவலாக மழைபெய்து வருகிறது. இந்நிலையில் இன்னும் 2 தினங்களில் கர்நாடகத்தில் பருவமழை பெய்ய துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியும் மழை இன்னும் சரியாக பெய்யவில்லை. இந்த வருடம் தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் சரியாக இல்லை. எனினும் பருவமழை பலவீனமானது என அர்த்தமல்ல.
இன்னும் 2 தினங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து மாநிலத்தில் மழைபெய்ய தொடங்கும். அதாவது வரும் 14 15 ஆம் தேதிகளில் மாநிலம் முழுதும் பலத்த மழை பெய்யும். மராட்டிய கடல்பகுதியில் மேலடுக்கு புயல் காரணமாக கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா போன்ற பகுதிகளில் 5 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும். இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் 5 நாட்களும் “மஞ்சள் அலர்ட்” எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அத்துடன் அரபிக் கடலுக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க போக வேண்டாம்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இதனிடையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கடலோர மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதால் மங்களூருவுக்கு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து உள்ளனர். 17 பேர் கொண்ட குழுவினர் மங்களூரு அருகில் பனம்பூரிலுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு சொந்தமான குடியிருப்புகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் தென் மேற்கு பருவமழை முடியும்வரை அங்கு தங்கி இருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் நேற்று பெல்தங்கடி, கடபா, சுள்ளியா தாலுகாக்களில் பரவலாக மழைபெய்தது. வருகிற நாட்களில் அதிக மழைபெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.