டெம்போ ஓட்டுனரை கல்லால் அடித்துக்கொலை செய்த நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் டெம்போ ஓட்டுனரான செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சங்கீதா(35) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக செந்தில்குமார் மனைவி மற்றும் மகனை விட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி செந்தில்குமார் அவரது வீட்டில் கல்லால் தாக்கப்பட்டு இறந்து கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செந்தில்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரின் நண்பரான கூலித்தொழிலாளி கிருபாகரன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது கிருபாகரனும், செந்தில்குமாரும் அடிக்கடி இணைந்து மது குடிப்பது வழக்கம். இந்த சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் செந்தில்குமார் பிரபாகரனை கட்டிப்பிடித்து முத்தமிட்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த கிருபாகரன் அருகில் கிடந்த கல்லால் செந்தில்குமாரை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.