அட்டகாசம் செய்யும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னதாமண்டரபள்ளி கிராமத்திற்குள் நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில் 3 காட்டு யானைகள் புகுந்தன. இந்த காட்டு யானைகள் விளைநிலங்களை நாசப்படுத்தி தோட்டத்தில் இருந்த தக்காளி செடிகள், தென்னை மரங்கள், மா மரங்கள் ஆகியவற்றை மிதித்தும், சேதப்படுத்தியும் அட்டகாசம் செய்துள்ளது. நேற்று காலை தோட்டத்திற்கு சென்ற விவசாயிகள் யானைகள் மரங்களை சேதப்படுத்தியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.