இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் பட்டினியால் வாடும் நிலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கின்றன என்று அரசு தெரிவித்துள்ளது. மக்களை மீட்பதற்காக உதவ வேண்டும் என்று சர்வதேச நாடுகளின் நிறுவனங்களுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்து வருகிறது. இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கு தொலைநோக்கு பொருளாதார மற்றும் அரசியல் சட்டத்தின் சீர்திருத்தங்கள் கண்டிப்பாக தேவைப்படுகிறது. அதில் இலங்கை அதிபரின் வானளாவிய அதிகாரத்தை குறைத்து நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரத்தை வழங்கக்கூடிய வகையில் 21 வது சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும். இலங்கை அரசியலமைப்பின் 21 வது சட்ட திருத்தத்தின் முன்மொழியப்பட்ட வரைவு திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்பிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அமைச்சரவை ஒரு வாரத்திற்கு இதனை ஒத்திவைத்துள்ளது.
இதற்கு முன்னதாக 19 வது சட்ட திருத்தத்தை நீக்கிய பிறகுதான் அரசியலமைப்பின் 20ஏ மூலம் அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கி உள்ளது. இந்நிலையில் 21 வது சட்டத்திருத்தம் அரசியலமைப்பின் 20ஏ நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கொண்டு வர பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். பிரதமராக ரனிலை பதவி ஏற்க பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதிபரின் அதிகாரத்தை குறைக்க தயார் என்று கோத்தபய தெரிவித்தார். ஆனால் தற்போது அதை எதிர்க்கிறார். அதனை தொடர்ந்து அதிபரின் அதிகாரத்தை குறைக்க அரசு தலைமை வழக்கறிஞர்களுடன் பிரதமர் ரணில் ஆலோசனை நடத்தி 21 ஆவது சட்ட திருத்தத்தை உருவாக்கியுள்ளார். அதில் அதிபரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் கூடுதல் அதிகாரம் வழங்குவது, இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது போன்றவை இடம்பெற்றுள்ளது. இதனை அமைச்சரவைக்கு ஒப்புதலுக்கு அனுப்ப முயற்சிகள் நடந்து வருகிறது.