கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி காரணமாக வரும் 5 மாதங்களுக்கு சிலையை பார்வையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் கடல் நடுவே 133 அடி திருவள்ளுவர் சிலைக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் ரசாயனக் கலவை பூசும் பணியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது. இறுதியாக 2017ஆம் ஆண்டு திருவள்ளுவர் சிலைக்கு ரசாயனக் கலவை பூசப்பட்டது. இதைத்தொடர்ந்து சிலிக்கான் எனப்படும் ரசாயன கலவை பூசும் பணி இன்று தொடங்கப்பட்டது.
சிலையில் உள்ள வெடிப்புகளில் சுண்ணாம்பு கலவை பூசப்பட்டு, பின்னர் காகிதக்கூழ் கொண்டு சிலையில் படிந்துள்ள உப்புக்கரைசல் நீக்கப்படுகிறது. இதிலிருந்து சில ரசாயன கலவை கொண்டுவரப்பட்டு பூசப்படுகிறது. இந்தப் பணியால் இன்று முதல் வருகிற நவம்பர் 2ஆம் தேதி வரை 5 மாதங்களுக்குள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.