தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏழை எளிய ஆதரவற்ற பெண்களுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி ஓட்டபிடாரம் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சுமார் 100 பெண் பயனாளிகளுக்கு 5 ஆடுகள் வீதம் வழங்கினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், “கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் வீதம் விரைவில் வழங்கப்படும். தூத்துக்குடியிலிருந்து மணியாச்சி வரை ரயில்வே இருப்புப் பாதை ஒட்டி விரைவில் சாலை அமைக்கப்படும், ஓட்டப்பிடாரம் பகுதி குளங்களுக்கு தாமிரபரணியில் இருந்து வாய்க்கால் வெட்டி தண்ணீர் வர கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். ஓசநூத்து, கொங்கராயகுறிச்சி, பெரியசாமிபுரம், சிவஞானபுரம், எப்போதும்வென்றான் உள்ளிட்ட இடங்களில் ரூபாய் 48 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனைகளுக்கு புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.