பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஷ் ஷெரிப் பாகிஸ்தானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கிடையில் தனது ஆட்சி கவிழ்ந்ததில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறியும் ஷபாஷ் புதிய பிரதமராக பொறுப்பேற்றதையும் இம்ரான்கான் ஏற்க மறுத்து வருகிறார்.
மேலும் தனது கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ- இன்சாப் கட்சியின் ஆதரவாளர்களை திரட்டி இம்ரான்கான் அவ்வபோது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தனது பாகிஸ்தான் தெக்ரிக்-ஐ- இன்சாப் கட்சி ஆதரவாளர்கள் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத் நோக்கி கடந்த மாதம் பேரணியாக சென்று உள்ளார். இந்த பேரணியை தடுத்து நிறுத்த இஸ்லாமாபாத் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு படையினர் குவிக்கப் பட்டிருந்தனர்.
மேலும் தடுப்புகளை மீறி இம்ரான்கான் ஆதரவாளர்கள் தலைநகர் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்ததால் போலீசாருக்கும், பேரணியாக சென்றவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இம்ரான்கான் ஆதரவாளர்கள் பலர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டத்தில் வன்முறை மூண்டு உயிரிழப்புகளும் நேரிட்டுள்ளது. இந்த நிலையில் இஸ்லாமாபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது அரசு சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கோரி முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது தேசத்துரோக வழக்கு தொடர பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.