டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை விமர்சித்த பாஜக எம்.பி. வெர்மாவை கைது செய்ய வலியுறுத்தி, ஆம் ஆத்மி கட்சியினர் இந்திய தேர்தல் ஆணையம் முன் போராட்டம் நடத்தினர்.
70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இதனால் தற்போது அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் தீவிரமாக இறங்கியுள்ளன. இதில் பல கட்சிகள் விதிகளை மீறுவதாக குற்றஞ்சாட்டப்படுகிறது.
இந்நிலையில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான சஞ்சய் சிங், பங்கஜ் குப்தா உள்ளிட்ட பலர் இந்திய தேர்தல் ஆணையத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் “டெல்லியின் மகனான அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று கூறிய வெர்மாவை கைது செய்ய வேண்டும்” என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பாஜக எம்.பி. பர்வேஷ் வெர்மா, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது