வங்கதேசத்தை சேர்ந்த 22 வயதான இளம்பெண் கிருஷ்ணா மந்தல். இவர் இந்தியாவை சேர்ந்த அபிக் மந்தல் என்பவரை முகநூல் மூலமாக காதலித்து வந்துள்ளார். பின்னர் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். ஆனால் கிருஷ்ணா மந்தல் இந்தியா வருவதற்காக பாஸ்போர்ட் இல்லை. இருப்பினும் தனது காதலனை திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அது என்னவென்றால் தனது காதலனை மணப்பதற்காக சட்டவிரோதமாக எல்லையைத் தாண்ட முடிவு செய்த அவர் முதலில் சுந்தரவனகாட்டை வந்தடைந்துள்ளார்.
அங்கிருந்து நதியில் ஒரு மணி நேரம் நீந்தி தனது இலக்கை அடைந்து இந்தியா வந்த அவர் மூன்று நாட்களுக்கு முன் கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவர் சட்டவிரோதமாக எல்லையை கடந்து வந்த காரணத்தினால் போலீசார் அவரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவர் வங்கதேசத்தின் ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.