சீனாவில் பருவநிலை மாற்றம் காரணமாக புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறுகின்றது. இந்த நிலையில் சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணங்களை சக்தி வாய்ந்த புயல் தாக்கியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த புயல் யுன்னான், புஜியான் மாகாணங்களை புரட்டிப் போட்டுள்ளது. மேலும் மணிக்கு பல மைல் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடித்து வீசியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து இருக்கின்றன.
மேலும் வீடுகளின் மேற்கூரைகள் பறந்தது. புயலின் காரணமாக கடல் கடுமையான கொந்தளிப்புடன் காணப்பட்டுள்ளது. மேலும் கரையில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் பல காற்றில் அடித்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கியது. புயலைத் தொடர்ந்து மழை கொட்டி தீர்த்தது. இதனால் நீர் நிலைகள் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கின்றது.
அதேபோல புயல் காரணமாக மின் விநியோகம் தடை பட்டிருப்பதால் நூற்றுக்கணக்கான வீடுகள் இருளில் மூழ்கி இருக்கின்றது. இதனை தொடர்ந்து தகவல் தொடர்பு சேவையும் முடங்கியுள்ளது. புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தினால் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடபட்ட விவசாய பயிர்கள் அனைத்தும் நாசமாகி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கனமழை வெள்ளத்தை தொடர்ந்து பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. புஜியான் மாகாணத்தின் வூப்பிங்நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு குடியிருப்புகள் கட்டிடங்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து உள்ளது. இதில் 8 பேர் பலியாகியுள்ளனர். அதேபோல யுன்னான் மாகாணத்தில் யுபிஐ நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 3 பேர் மாயமாகி இருக்கின்றர். ஆனால் அவர்களின் கதி என்ன என்பது பற்றி தெரியவில்லை. குவாங்சி பிராந்தியத்தின் ஜின்செங் நகரில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு 2 பேர் பலியாகியுள்ளனர். மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டு தீவிர மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 1600 க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.