மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்..
டி. ராஜேந்தர் நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசை என அனைத்துத் துறையிலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு முத்திரை பதித்தவர்.. இந்நிலையில் இவருக்கு கடந்த 19ஆம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு மருத்துவர்கள் டி.ராஜேந்தருக்கு அயல்நாட்டு மருத்துவம் தேவை என கூறிய நிலையில், சிம்பு டுவிட்டரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்..
அதில், எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும், மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்து செல்கிறோம். அவர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 24, 2022