வளிமண்டலத்தில் அதிகரித்து வரும் வெப்பநிலை உயர்வு காரணமாக கடல் நீர்மட்டம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது என்று ஐநா எச்சரிக்கை விடுத்துள்ளது. 2021 ஆம் ஆண்டில் உலகளாவிய காலநிலை குறித்து சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், புவியின் மீதான மனிதர்களின் தலையீடு நீண்டகால பாதிப்பிற்கு வித்திட்டுள்ளது. அதீத காலநிலை மாற்றம் தினசரி பேரிடர்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் மனித வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தின் மீது பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
கடந்த ஏழு ஆண்டுகளில் உலகளாவிய சராசரி வெப்பநிலை இதுவரை இல்லாத அளவிற்கு பதிவாகியுள்ளது. இது உணவு தானியங்களின் உற்பத்தியை பாதித்துள்ளது. அதன் காரணமாக அவற்றின் விலை உயர்வு புதிய உச்சத்தை அடைவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. உலகக் கடற்பரப்பு 90 சதவீதத்திற்கும் அதிகமாக வெப்ப அலைகளை உள்வாங்கி கொண்டதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் இதுவரை இல்லாத வெப்பநிலையை கடற்பரப்பு அடைந்து வருவதை இந்த அறிக்கை கூறியுள்ளது.
அதீத வெப்பநிலை உயர்வு கடல்வாழ் உயிரினங்களை பெரிதும் பாதிப்பதாகவும் 26 ஆயிரம் ஆண்டுகள் இல்லாத அளவு அமிலத்தன்மை உடன் கடல் மாறியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றத்தை சமாளிப்பதில் மனித இனத்தின் தோல்வியை இந்த அறிக்கை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. நம் அழகிய பூமி பந்தை காக்க நம்மால் முடிந்ததை செய்ய முயற்சிப்போம்…