மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்ட சலுகை நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில்வே நிர்வாகத்திற்கு 1500 கோடி கூடுதல் வருமானம் கிடைத்ததாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மார்ச் மாதம் முதல் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரயில்வே கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த திட்டம் அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்ததன் மூலமாக இந்திய ரயில்வேக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 1500 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் பின்வரும் விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 2020 மார்ச் 20ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31-ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 7.31 கோடி மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதில் 4.46 கோடியில் 60 வயது ஆண்களும், 2.84 கோடியில் 58 வயது பெண்களும், 8310 திருநங்கைகளும் பயணம் மேற்கொண்டுள்ளனர். இந்த இரண்டு ஆண்டுகளில் மூத்த குடிமக்கள் மூலம் ரயில்வேக்கு 3264 கோடி வருமானம் கிடைத்துள்ளது. இதில் கட்டண சலுகையை ரத்து செய்ததன் மூலமாக 1500 கோடி வரை ரயில்வேக்கு வருமானம் கிடைத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.