Categories
தேசிய செய்திகள்

இங்கே பெண்களுக்கு எதிரான கொடுமை அதிகமா இருக்கு… ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இந்திய கலாசார அடிப்படையில் பெண் வீட்டார் தங்களது உறவினர்கள் மற்றும் சமூகஅளவில் மாப்பிள்ளை தேடுவார்கள். இதையடுத்து இருவீட்டு பெரியவர்களும் பேசி பெண் பார்க்கும் நிகழ்ச்சி, அழைப்பிதழ் அடிப்பது என பல்வேறு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடைபெறுகிறது. இவ்வாறு பார்த்து பார்த்து நடத்தப்படும் திருமணங்களில் சில பந்தங்கள் தோல்வியில் முடிகிறது. ஏனெனில் வரதட்சணை பிரச்சினை, மாமனார்-மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினருடைய கொடுமை, கணவர் கொடுமை என பல்வேறு பிரச்சினையின் காரணமாக திருமண பந்தங்கள் பாதியில் முறிந்து போகிறது. இதில் அதிகளவில் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

இதற்கிடையில் அதிலிருந்து ஒருசில பெண்களே முறையாக விவாகரத்து பெற்று மறுமணம் புரிந்து நிம்மதியாக வாழ்கிறார்கள். எனினும் பெரும்பாலான பெண்கள் தங்களது வாழ்கை அவ்வளவுதான் என்று சகித்துக்கொண்டும், கொடுமைகளை அனுபவித்துக் கொண்டும் வாழ்கின்றனர். இதனால் பெண்களுக்கு அதிக கொடுமைகள், தொல்லைகள் கொடுப்பது பற்றி தேசிய குடும்ப நலத்துறை ஒரு ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் இந்தியஅளவில் பெண்களுக்கு அதிக கொடுமைகள், தொல்லைகள் கொடுப்பதில் கர்நாடகம் மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது. இம்மாநிலத்திற்கு எதிராக 48% பேர் ஓட்டுப்போட்டுள்ளனர்.

அடுத்ததாக பீகார் மாநிலம் 2ஆம் இடத்தை பிடித்துள்ளது. அம்மாநிலத்திற்கு எதிராக 43 % பேர் ஓட்டுப்போட்டுள்ளனர். அதனை தொடர்ந்து எந்தெந்த அடிப்படையில் பெண்களுக்கு கொடுமைகள் இழைக்கப்படுகிறது என்பது தொடர்பாகவும் தேசிய குடும்ப நலத்துறை ஒரு தகவலை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, மனதளவிலும் உடல் அளவிலும், பாலியல் அளவிலும் அதிக தொல்லைகள் மற்றும் கொடுமைகள் கொடுப்பது கணவர்கள் தான். இதை தவிரத்து சில கணவர்கள் வெளி உலகிற்கு நல்லவர்களாக இருந்தாலும் மனைவிகளிடம் மட்டும் சைக்கோபோல் நடந்து கொடுமைப்படுத்துவது உண்டு என்று கூறப்படுகிறது.

அத்துடன் பெண்களின் நடத்தை மீது சந்தேகமடைந்தும், அவர்களை கடுமையாக விமர்சித்தும் தொல்லை கொடுக்கப்படுகிறது. குடும்ப தகராறை காரணம் காட்டி பெண்கள் தாக்கப்படுவதும் அதிகரித்து இருக்கிறது. இதனால் காயமடையும் பெண்களை கணவரோ, அவரது குடும்பத்தினரோ காப்பாற்ற முன் வருவதும் இல்லை என்று தெரிகிறது. இதில் கணவன்மார்கள் தங்களின் மனைவிகளை கண்பகுதியில் தாக்குவதும், கை-கால்களை முறிப்பதும் கொடூரமாக தாக்குவதும் அதிகரித்துஉள்ளது. மேலும் பெண்கள் மீது தீ வைக்கும் சம்பவங்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் பெரும்பாலான பெண்கள் குடும்ப பிரச்சினைகளை சகித்துக்கொண்டு சமூகத்தை மனதில் வைத்து தங்களுக்கான பிரச்சினைகளை வெளியே சொல்வதில்லை. 58 % பெண்கள் பிரச்சினைகளை சகித்துக்கொள்ள முடியாமல் தங்களது பெற்றோர் வீடுகளுக்கு சென்று விடுகின்றனர். அதுமட்டுமின்றி 27 % பெண்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பிரச்சினைகளை கூறி தீர்த்துக்கொள்வதும், 9 % பெண்கள் சமூகஅமைப்புகளின் உதவியை நாடுவதும், 2 % பெண்கள் தாங்களே தங்கள் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 1 சதவீதத்திற்கும் குறைவான பெண்களே காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு சென்று புகார் அளிப்பதும் ஆய்வில் தெரியவந்து இருக்கிறது.

Categories

Tech |