முதியவர் தவறவிட்ட பணப்பையை காவல்துறையினர் பத்திரமாக ஒப்படைத்தனர்.
நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரி மார்க்கெட்டில் ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடைக்கு கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வந்த முதியவர் ஒருவர் ஆவணங்களை ஜெராக்ஸ் எடுத்து விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் கடையில் தனது பையை தவற விட்டுள்ளார். இதனை பார்த்த கடை ஊழியர் ஜெனட் பவுலின் அந்த பையை எடுத்தபோது அதில் 13 ஆயிரம் ரூபாய் இருந்தது தெரியவந்தது. மேலும் அந்த பையில் கிருஷ்ணன் கல்லட்டி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் உடனடியாக கடை ஊழியர் அந்த பணத்தை கோத்தகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பணப்பையை தவறவிட்ட முதியவர் கல்லட்டியை சேர்ந்த கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. மேலும் அந்த பணம் பச்சை தேயிலை வினியோகித்த தொகை என்பதும் தெரிந்தது. இதனால் காவல்துறையினர் அந்த முதியவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து பணத்தை பத்திரமாக ஒப்படைத்தனர். இந்த பணத்தை நேர்மையாக காவல்துறையினரிடம் கொடுத்த கடை ஊழியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.