தொழிலாளி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள முத்துசேர்வாமடம் பெரிய தெருவில் கூலி தொழிலாளியான ராமர்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராணி(48) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் காட்டுக்கொல்லை கிராமத்தில் இருக்கும் மளிகை கடைக்கு அருகே ராமர் விழுந்து கிடப்பதாக ராணிக்கு சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் ராணி தனது குழந்தைகளுடன் அங்கு சென்று பார்த்தபோது ராமர் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராமரின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து ராணி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராமர் கொலை செய்யப்பட்டாரா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.